சித்தூர் :
பஞ்ச பூதத் தலங்களில் வாயுத்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு திருகாளகத்தீசுவரர் நாதர், ஞானபிரசுனாம்பிகை அம்பாள் அருள்பாலித்து வருகின்றனர். ராகு-கேது பரிகார தலமான இந்த கோவில், கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
நீண்ட நாட்கள் கோவில் மூடியிருப்பதால் பக்தர்களும், இந்து அமைப்புகளும் கோவில்களை திறக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மத்திய அரசு கடந்த 8-ந்தேதி கோவில்களை திறக்க உத்தரவிட்டது. அதன்படி திருமலை திருப்பதி உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) மதியம் நடை திறக்கப்பட்டு கோவில் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (செவ்வாய்கிழமை) உள்ளூர் முதல் பக்தர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர். 17-ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.