உலகம்

நேபாளத்தில் 16 வயதானவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை- ஆனால்..,

இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவருக்குப் பதிலாக சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்ற நிலையில், அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மாலை மலர்

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதன்மூலம் நேபாளத்தில் 16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். பொதுவாக தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் வழங்கப்படும். தற்போது இப்போதில் இருந்தே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், 16 வயதில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றாலும், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும்.