உலகம்

மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹவுதி

மத்திய இஸ்ரேல் நோக்கி வந்த ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளது.எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் மறைவிடத்திற்கு ஓட்டம்.

மாலை மலர்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு ஆகியவை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று திடீரென ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான மறைவிடத்திற்கு ஓடினர்.

இதற்கிடையே ஏவுகணையை தடுத்து அழிக்கும் பாதுகாப்பு சிஸ்டம் மூலமாக ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை இரவும் ஹவுதி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை இஸ்ரேல் எல்லைக்குள் நுழைவதற்குள் தாக்கி அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி ஏமனின் தலைநகரான சானாவை 2014-ல் இருந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தி வரும் அதேவேளையில், சுமார் 100 வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.