தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார்.