உலகம்

சுங்கச்சாவடியில் நின்ற வாகனங்கள் மீது மோதிய பஸ்:10 பேர் பரிதாப பலி

பிலிப்பைன்சில் சுங்கச்சாவடி அருகே வாகனங்கள் வரிசையாக நின்றன.அந்த வாகனங்கள் மீது ஒரு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

மாலை மலர்

மணிலா:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

டார்லாக் நகரில் உள்ள சுங்கச்சாவடி அருகே பஸ் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ் முன்னால் வரிசையில் நின்ற ஒரு கார் மீது மோதியது.

இந்த சங்கிலித் தொடர் விபத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதின. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது 2 பஸ்களுக்கு இடையில் ஒரு மினி வேன் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த வேனில் இருந்த குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதேபோல், நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு காருக்குள் இருந்த தம்பதியும் உடல் நசுங்கி பலியாகினர்.

காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் வலியில் அலறி துடித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.