ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது அரிதானது. முக்கியமான பண்டிகை தினங்களுக்கு 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்து விடுகிறது. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டு உறுதியாகுமா என்று காத்திருந்து கடைசியில் ஏமாற்றம் அடைகிறார்கள்.
ரெயில்களின் இருக்கை எண்ணிக்கைக்கும் பயணிகள் தேவைக்கும் இடையான இடைவெளி மிக அதிகம். இது குறித்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கூறியதாவது:-
ரெயில்வேயின் திறனை உயர்த்துவதற்கு கூடுதல் ரெயில் பாதைகள் அமைப்பதே தீர்வாக இருக்கும். இதற்காக 8.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளில் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் 16,500 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைத்துள்ளோம்.
ரெயில்வேக்கு கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பயணிகள் போக்குவரத்து மூலம் கிடைக்கிறது.
சரக்கு போக்குவரத்துக்கு தனிப்பாதைகள் இல்லை. சரக்கு ரெயில்கள் போக்குவரத்துக்கு தனிப்பாதைகள் உருவாக்கப்படுகிறது. இந்த பணிகள் 2019-ல் முடிவடையும்.
அதன் பிறகு பயணிகள் ரெயில்களில் கேட்டவுடன் முன்பதிவு டிக்கெட் கிடைக்கும். 2021-ல் இந்த வசதி கிடைக்கும்.
ரெயில் பாதைகளை பலப்படுத்தி மேம்படுத்துதல், சிக்னல்களை மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் பல ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது, கூடுதல் ரெயில்கள் இயக்குவது சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.