திருச்சியில் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த பிரதமர் மோடி இன்று காலை 11 மணி அளவில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார். காரில் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி விடுதியில் இருந்து ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.
அப்போது சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர்.,அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் திரண்டு நின்று உற்சாகமாக கையசைத்தனர்.
மேலும் பாஜகவினர் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.
வரவேற்பை உற்சாகமாக ஏற்றுகொண்ட பிரதமர் மோடி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, கண்டோன்மென்ட், மாநகராட்சி அலுவலகம், ஒத்தக்கடை , தலைமை தபால் நிலைய சிக்னல் கடந்து டி.வி.எஸ். டோல்கேட், சுப்பிரமணியபுரம், மத்திய சிறை பகுதி சாலை வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற மக்களைபார்த்து கையசைத்தபடி சென்றார்.
திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே ஒத்தக்கடையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இப்பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பிரதமரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படங்களும் இடம்பெற்று இருந்தது.
விமான நிலையம் வந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார்.