தமிழக செய்திகள்

வாகனத்தில் அடிபட்டு குரங்கு உயிரிழப்பு - இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்

குரங்கு அருகே உள்ள அருள்வாடி கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள சாலையில் சுற்றி திரிந்துள்ளது.

மாலை மலர்

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே ஜீரஹள்ளி வனச்சரகத்தில் யானை, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை, குரங்குகள் உள்ளன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் விலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகே உள்ள கிராமத்துக்குள் புகுவதும், தோட்டத்துக்குள் புகுவதும் தொடர்கதையாகி வருகிறது.

அதேபோல் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து குரங்கு ஒன்று உணவு தேடி வெளியேறியுள்ளது. பின்னர் அந்தக் குரங்கு அருகே உள்ள அருள்வாடி கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள சாலையில் சுற்றி திரிந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று குரங்கு மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட குரங்கு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதைப் பார்த்த அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குரங்கின் உடலை கிராம மக்கள் இறுதி சடங்கு செய்து புதைக்க முடிவு செய்தனர். இதை அடுத்து குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்தனர்.

பின்னர் அந்தப் பகுதியில் குழி தோண்டி குரங்கின் உடலை புதைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.