தமிழக செய்திகள்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும்.

மாலை மலர்

தென்மேற்கு பருவமழை கடந்த 24-ந்தேதி தொடங்கி தென் இந்தியா முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.