தமிழக செய்திகள்

எம்ஜிஆரை அவமதிக்கும் வகையில் பேசினேனா? - திருமாவளவன் விளக்கம்

திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என திருமாவளவன் பேச்சு எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார் என இபிஎஸ் விமர்சனம்

மாலை மலர்

திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள். எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார். வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த திருமாவளவன், "எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை நான் பலமுறை பாராட்டியுள்ளேன்.

தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி, எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவு நிகழ்ச்சியில் பேசினேன். அதில், எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஒரு சாதிக்குள் சுருக்க முடியாது. எம்ஜிஆரை ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.