தமிழக செய்திகள்

சபாநாயகர் அப்பாவு நியாயமாக செயல்படுகிறார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சபாநாயகர் அப்பாவு யார் மனமும் புண்படாமல் பேசக்கூடியவர்.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவேசமாக பேசும்போது அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முயல்வார்.

மாலை மலர்

சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிராக அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அவையை துணை சபாநாயகர் நடத்தினார்.

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

சட்டசபை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சனைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் சபாநாயகர் அப்பாவு பாரபட்சம் காட்டுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

* மக்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் தான் இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளனர்.

* யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.

* சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார் என்பதை மக்கள் அறிவதற்கான விவாதமாக பார்க்கிறேன்.

* நாம் விமர்சனம் செய்பவரை என்றோ ஒருநாள் நேரில் சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்து விமர்சனம் செய்யுமாறு கலைஞர் கூறுவார்.

* சபாநாயகர் அப்பாவு யார் மனமும் புண்படாமல் பேசக்கூடியவர்.

* சபாநாயகர் அப்பாவு கனிவானவர், அதே நேரத்தில கண்டிப்பானவர்.

* சில எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கண்ஜாடையில் பேசுவதை பார்த்திருக்கிறேன்.

* என் தலையீடோ, அமைச்சர் தலையீடோ இல்லாத வகையில் செயல்படுகிறார்.

* பேரவை தலைவராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் அப்பாவு.

* அ.தி.மு.க. கொண்டு வந்த தீர்மானத்தில் பல உண்மைக்கு புறம்பான சில செய்திகள் உள்ளன.

* பேரவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை தி.மு.க.வினர் பேசினால் அவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்கி உள்ளார்.

* தங்களிடம் சபாநாயகர் கண்டிப்பாக நடப்பதாக ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர்.

* விவாதங்களின் போதும் சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் நடந்து கொண்டுள்ளார்.

* அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவேசமாக பேசும்போது அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் முயல்வார்.

* முந்தைய ஆட்சியில் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை வசைபாடுவதும் கூட அவை குறிப்பில் ஏறும்.

* பேரவையில் கடைபிடிக்க வேண்டிய பண்பாட்டின் தலைவனாக அப்பாவு செயல்பட்டுள்ளார்.

* பேரவை தலைவராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் அப்பாவு.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.