சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், கோடம்பாக்கம், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், வடபழனி, அடையாறு, மயிலாப்பூர், வளசரவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், சேலையூர், தாம்பரம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், புழல், அண்ணா நகர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
நுங்கம்பாக்கம், அடையாறு, வடபழனி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் சுமார் 50 நிமிடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தியாகராயநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணுக்கால் அளவு மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் அதிகாலையில் கனமழை பெய்த நிலையில், பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.