தமிழக செய்திகள்

பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை இன்றுவரை விடுவிக்காத மத்திய அரசு: அன்பில் மகேஷ்

Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்க வேண்டிய நிதியில் ஒரு தவணை கூட விடுவிக்கப்படவில்லை.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது கைவிடவேண்டும்.

மாலை மலர்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.

இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.

ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024 - 2025'ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதில் "தமிழ்நாடு" இல்லை.

போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு, அதில் அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிடவேண்டும்.

இவ்வாறு அன்பில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார்.