சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் களம் காண உள்ளனர். இதில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடனும் போட்டியிட உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார். அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார்.