செய்திகள்

பாடியில் முதியவரை ஆட்டோவில் கடத்தி நகை பறித்த 2 பேர் கைது

பாடியில் முதியவரை ஆட்டோவில் கடத்தி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

அம்பத்தூர்:

பாடி வடக்கு மாடவீதியை சேர்ந்தவர் கோபிநாத் (71). இவர் நேற்று காலை அதே பகுதியில் நடைபயிற்சி சென்றார்.

அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் கோபிநாத்தை கத்தி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர். பின்னர் அவரிடம் இருந்த 6 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் இறக்கிவிட்டு இருவரும் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபிநாத் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் கோபிநாத்தை கடத்தியது திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளியான மகேஷ், அவனது கூட்டாளி விஜய் என்பது தெரிந்தது.

இதையடுத்து திருநின்றவூரில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான இருவரும் இதே போல் பல்வேறு இடங்களில் முதியவர்களையும், தனியாக நடந்து செல்பவர்களையும் ஆட்டோவில் கடத்திச் சென்று கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது.