கடந்த ஏப்ரல் மாதம் பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏசிபி) நாராயணா பரமணியை நோக்கி கர்நாடக முதல்வர் சித்தராமையா கை ஓங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறி, நாராயணா பரமணி விருப்ப ஓய்வு கோரி கடிதம் அளித்திருந்தார். அரசு மற்றும் காவல்துறையிடம் இருந்து ஏற்பட்ட அவமானத்தையும், ஆதரவின்மையையும் இதற்கு காரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.
கன்னடத்தில் எழுதப்பட்ட மூன்று பக்க கடிதத்தில், இந்தச் சம்பவத்தால் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவமதிக்கப்பட்டதாகவும் உணர்வுபூர்வமாக விளக்கினார்.
"முதலமைச்சரை நான் நேருக்கு நேர் சந்திக்க விரும்பினேன்... ஆனால் பொதுவெளியில் அது ஏற்படுத்தும் தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்டு அதைத் தவிர்த்தேன்" என்று அவர் எழுதினார். இந்தச் சம்பவம் தனது குடும்பத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பரமணி தனது ஓய்வு முடிவை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட செயல் என்றும், அவமானப்படுத்தும் நோக்கம் முதல்வருக்கு இல்லை என்றும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா விளக்கமளித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.