இந்தியா

இந்திராகாந்திக்கு இருந்த துணிச்சலில் பிரதமர் மோடிக்கு பாதியாவது இருக்கிறதா?: ராகுல் காந்தி கேள்வி

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றார் ராகுல் காந்தி.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பஹல்காமில் அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எனக்கு நேர்ந்ததாக உணர்ந்தேன்.

ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு முழு ஆதரவு அளித்தன.

மத்திய அரசு ராணுவத்தினரை சுதந்திரமாக செயல்படவில்லை. அதனால் நாம் நமது போர் விமானங்களை இழந்தோம்.

ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானை தொடர்புகொண்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என பாகிஸ்தானிடமே அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் எனக் கூறியது மிகப்பெரிய தவறு.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஒரு நாடு கூட பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. இந்தியாவையும் பாகிஸ்தானையும் உலக நாடுகள் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கின்றன.

போர் நிறுத்தத்துக்கு காரணம் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 29 முறை கூறியுள்ளார். அதை எதிர்த்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மறுத்து ஒரு வார்த்தை கூறவில்லையே?

இந்திரா காந்திக்கு இருக்கும் துணிச்சலில் 50 சதவீதமாவது இருந்தால் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அதிபர் டிரம்ப் ஏன் விருந்தளித்தார்?

சீனா- பாகிஸ்தானின் உறவு நிலை குறித்து நான் எச்சரித்ததை புறக்கணித்து விட்டீர்கள்.

வெளியுறவுக் கொள்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என காட்டமாக தெரிவித்தார்.