உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது.
இதில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் ஒரு காரில் கும்பமேளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது.
அதிலிருந்து பக்தர்கள் 10 பேர் பலியானார்கள். மேலும் பஸ்சில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்கள் உடல்களை ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
பலியானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.