பா.ஜ.க. அரசு அமைந்து 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பிரதமராக 3-வது முறையாக பதவியேற்று ஓராண்டு முடிவு பெறும் நிலையில் பா.ஜ.க. ஆட்சி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் "நல்லாட்சி மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதத்தாலும், கூட்டு பங்கேற்பாலும் இந்தியா பல்வேறு துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், காலநிலை நடவடிக்கை, டிஜிட்டல் கண்டுபிடிப்பு போன்ற உலகளாவிய பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்து வாழ்க்கையை எளிதாக்கியுள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 11 ஆண்டுகளில் செய்த பணிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜே.பி. நட்டா கூறியதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஊழல், மோசடிகள் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் என முத்திரை குத்தப்பட்டது.
பிரதமர் மோடி நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றி, பொறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள அரசாங்கத்தை வழங்குவதன் மூலம் செயல்திறன் மற்றும் நல்லாட்சி அரசியலைத் தொடங்கினார்.
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் அரசு செய்த பணிகள் அசாதாரணமானவை, மேலும் அவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.
2014-க்கு முன்பு, முந்தைய அரசாங்கம் ஊழலால் நிறைந்திருந்தது, நாடு முழுவதும் ஒரு எதிர்மறை உணர்வு நிலவியது. ஆனால் 2014-க்குப் பிறகு, பிரதமர் மோடியின் தலைமையில் அந்த உணர்வு மாறியது. இப்போது மக்கள் பெருமையுடன், "Modi hai to mumkin hai (மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்" என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.