நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இண்டிகோ நிறுவனத்தின் இச்செயலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ரத்தான விமான டிக்கெட்டிற்கான பணமும் திருப்பி தரப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே, இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்படும் சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து விவகாரத்தை கண்காணிக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இப்பிரச்சினை பற்றி விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழு 15 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றும் நாடு முழுவதும் இண்டிகோ விமானத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஜம்மு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள்...
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்...