மத்திய அரசு சமீபத்தில் வக்பு திருத்த சட்ட மசோதாவை பாராளுமன்றத்தின் 2 சபைகளிலும் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை எனவும், இதனால் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை வெளிப்படைதன்மையுடன் மேலாண்மை செய்வதற்கு வசதியாக 'உமீத்' எனும் போர்ட்டலை (இணையதளம்) மத்திய அரசு வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ளது.
இந்த இணையதளம் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரம் அளித்தல், செயல் திறன் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி செயல்பட உள்ளது.
இந்த திட்டத்தின்படி அனைத்து வக்பு சொத்துக்களும் அடுத்த 6 மாதங்களுக்குள் இந்த போர்ட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும்.
சொத்துக்களின் நீளம், அகலம் மற்றும் புவிசார் குறிசொற்கள் உள்ள இடங்கள் உள்ளிட்ட விரிவான விபரங்களுடன் சொத்து விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.
இதற்கான பதிவுகளை அந்தந்த மாநில வக்பு வாரியங்கள் எளிதாக்கும். தொழில்நுட்ப அல்லது பிற காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யப்படாத சொத்துக்களுக்கு 1 முதல் 2 மாதங்கள் வரை நீட்டிப்பு வழங்கப்படலாம்.
அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் பதிவு செய்யப்படாத சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக எடுத்துக்கொள்ளப்படும். அதன் பிறகு அந்த சொத்துக்கள் தீர்வுக்காக வக்பு தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.