ஜகர்தா:
இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. அந்நாட்டின் ஜாவா மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மேலும், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் ஜாவா மாகாணம் போஹர் மாவட்டம் ஷிபோலங் கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்து வீடு மண்ணுக்குள் புதைந்தது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த 4 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த மீட்பு முயற்சியில் காலதாமதம் ஆனதால் நிலச்சரிவில் சிக்கி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.