கழுகுமலை:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது ரவுடிகளால் அரசு அலுவலக பணியாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் உதவி பொறியாளர் மணிகண்டன் தாக்கப்பட்டதை கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் துணை கலெக்டர் அருளரசன் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியன் அலுவலகத்தில் அலுவலக பணியாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க துணை தலைவரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் யூனியன் அலுவலக பணியாளர்களை தாக்கியவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் யூனியன் அலுவலக மேலாளர் மகேந்திரபாண்டி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்புராஜ், செல்வகுமார், சங்கரேஸ்வரன், ஓவர்சீயர்கள் கணேசன், தமிழரசன், ஊராட்சி செயலாளர்கள் முத்துப்பாண்டி, செல்வம், ரஜேந்திரன், அலுவலக உதவியாளர் வேலம்மாள், பணித்தள பொறுப்பாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முத்துபாண்டி நன்றி கூறினார்.