சினிமா செய்திகள்

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் உயரிய விருது!

கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

‘தெலங்கானா கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் நேற்று (மார்ச் 19) நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வரும் கமல்ஹாசனின் பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, `சாகர சங்கமம்' மற்றும் `சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல்ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.

தெலங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி , இந்த விருதை கமல்ஹாசனுக்கு வழங்கினார். இன்று `பான்-இந்தியா சினிமா' என கொண்டாடப்படும் வேளையில், பல மொழிகளில் கமல்ஹாசன் ஆரம்ப காலத்திலேயே செய்த சாதனைகளே அதற்கு உண்மையான அடித்தளமாக உள்ளது.

புதுமையான கதைக்களங்கள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் மற்றும் புதுப்புது தொழில்நுட்பங்கள் என கமல்ஹாசன் இந்திய சினிமாவை தொடர்ந்து செதுக்கி வருவதையும் இந்த விருது கௌரவித்தது.