உட்புற வடிவமைப்பு துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வரும் சந்தோஷ் சோபன், எதிர்பார்த்த வாய்ப்பு இல்லாமல் வாழ்க்கையுடன் போராடுகிறார். வாழ்வாதாரத்திற்காக பகுதி நேரமாக இருசக்கர டாக்ஸி ஓட்டி வருகிறார்.
அதே சமயம், ஐடி துறையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் வேலை தேடும் மானசா வாரணாசியை சந்திக்கிறார். இந்த இருவரும், ஒரு கட்டத்தில் ஒரே வீட்டில் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இறுதியில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைய காரணம் என்ன? இருவரும் வாழ்க்கையில் சாதித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சந்தோஷ் சோபன் தமிழுக்கு புதிய முகம் என்றாலும், நடிப்பில் புதுமை தெரியாத அளவுக்கு இயல்பை வெளிப்படுத்துகிறார். போராட்டம், நம்பிக்கை, காதல் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
மானசா வாரணாசி, முதல் பாதியில் லேசான நடிப்பு மற்றும் அழகால் ஈர்க்க, இரண்டாம் பாதியில் உணர்ச்சி காட்சிகளில் கவனம் பெறுகிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி அதிகளவில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
யோகி பாபுவின் காட்சிகள் குறைவாக இருந்தாலும், வழக்கமான வசன டைமிங் சிரிப்பைத் தருகிறது. சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துணை நடிகர்கள் கதையின் ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர். ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதை அழகாக காண்பித்து இருக்கிறார். வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், படம் பார்க்கும்போது புது அனுபவத்தை அளிக்கிறது.
திரைக்கதை எளிமையான நகர்வுடன் அமைந்துள்ளது. காதல், கனவு, முயற்சி என்ற மூன்று கோட்டுகளை மையமாக வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.
இசை
ஆதித்யா ரவீந்திரனின் இசை, படத்தின் உணர்ச்சி ஓட்டத்துக்கு பொருத்தமாக உள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பு.
ரேட்டிங்-3.5/5