search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுண்டல்"

    • நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
    • உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    எடை இழப்பு என்று வரும்போது நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதே நேரம் சாப்பிடும் உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் உங்களது எடை இழப்பு இலக்கை அடைய உதவும் சுவையான குறைந்த கலோரி நிறைந்த தின்பண்டங்கள் பற்றி பார்க்கலாம். இதை எளிதாக நீங்களே வீட்டில் செய்து விட முடியும். எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக, இவற்றை சாப்பிடும்போது, திருப்திகரமாகவே உடல் எடையைக் குறைக்கலாம்.

     முளைக்கட்டிய பச்சைப் பயறு:

    முளைகட்டிய பச்சைப் பயரில் நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிப் போட்டு, சிறிதளவு உப்பு மற்றும் கரம் மசாலாவை இதில் கலந்து, சாட் போல தயாரித்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

     வேகவைத்த வெஜிடபிள் கட்லட்:

    உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நன்கு வேக வைத்து, பின்னர் அவற்றை கட்டலெட்டுகளாக செய்து சாப்பிடலாம். இதை செய்வதற்கு கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றை வேக வைத்து நன்றாகப் பிசைந்து, தட்டையாக்கி, பிரெட் தூளில் தொட்டு இருபுறமும் வேகும்படி தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால், வெஜிடபிள் கட்லெட் ரெடி.

     வறுத்த மசாலா கொண்டைக்கடலை:

    சென்னா என அழைக்கப்படும் கொண்டைக்கடலை ஒரு ஆரோக்கியமான உணவாகும். நன்கு காய்ந்த கொண்டக்கடலையை தண்ணீரில் நனைத்து, கொத்தமல்லி மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் போன்ற மசாலாக்களை சேர்த்து மிதமான சூட்டில் வாணலியில் வறுத்து சாப்பிட்டால், புரதச்சத்து நிறைந்த சூப்பர் ஸ்னாக் தயார்.

     வெள்ளரிக்காய் ரைத்தா:

    வெள்ளரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் ரைத்தா ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் தயிர் சார்ந்த சைடு டிஷ் ஆகும். இது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடிய சிறந்த ஸ்னாக். இதை செய்வதற்கு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து சீரகத்தூள், புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     சுண்டல்:

    சில குறிப்பிட்ட பருப்பு வகைகளை வேகவைத்து செய்யப்படும் புரதம் நிறைந்த உணவுதான் இந்த சுண்டல். கொண்டைக்கடலை, காராமணி அல்லது பச்சை பயறு போன்ற பயர் வகைகளை ஊற வைத்து, பின்னர் வேக வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் கொஞ்சம் கடுகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு பிழிந்து தாளித்தால் சூப்பர் சுவையில் சுண்டல் ரெடி. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே நேரம் கலோரியும் குறைவுதான் என்பதால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

     மசாலா பொரி:

    உங்களுக்கு மேலே குறிப்பிட்ட எந்த ஸ்நாக்கும் செய்ய முடியவில்லை என்றால், கடைக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து பொரி வாங்கி சாப்பிடுங்கள். இதை நேரடியாக அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து, சாட் மசாலா தூவி அப்படியே கலந்து மசாலா பொரியாக்கி சாப்பிட்டால், இதைவிட அற்புதமான குறைந்த கலோரி உணவு இருக்கவா போகிறது?.

    இவை அனைத்துமே குறைந்த கலோரியை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகும். இதை அதிகமாக சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை கூடாது. எனவே இவற்றை சாப்பிட்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முயலுங்கள்.

    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பாசிப்பருப்பில் அதிக அளவு புரோட்டின், கால்சியம் அடங்கியுள்ளது.
    • பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.

    தேவையான பொருட்கள்

    பாசிப் பருப்பு - 1 கப்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    உப்பு - தேவைகேற்ப

    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

    பொடி செய்ய:

    தனியா- 1 கைப்பிடி

    பச்சை மிளகாய் - 1

    இஞ்சி - சிறிய துண்டு

    தாளிக்க:

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    காய்ந்த மிளகாய் - 2

    செய்முறை

    பாசிப் பருப்பை நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    பொடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    கடைசியாக, பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

    இப்போது சத்தான ஸ்நாக்ஸ் பாசிப் பருப்பு சுண்டல் ரெடி.

    • பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது.
    • பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.

    தேவையான பொருட்கள்

    பச்சை பட்டாணி - 1 கப்,

    கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,

    தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு.

    தாளிக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    கடுகு - 1 டீஸ்பூன்,

    வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள்.

    மேலே தூவுவதற்கு

    அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை

    பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.

    வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும்.

    இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.

    • சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பாஸ்தா என்றால் சாப்பிட அழைக்காமலேயே சாப்பிடுவதற்கு அமர்ந்து விடுவார்கள்.
    • பாஸ்தாவில் இன்று சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ரிப்பன் வடிவில் இருக்கும் மேக்ரோனி - ½கப்

    மூக்கடலை அல்லது ராஜ்மா (நம் விருப்பத்திகேற்ப) - ½கப்

    வெங்காயம் (விருப்பமிருந்தால்) - சிறியது 1

    தக்காளி சிறியது - 1

    தேங்காய் துருவியது - சிறிதளவு

    தாளிக்க கடுகு, உளுந்து, - சிறிதளவு

    மிளகாய் (ஃப்ளோக்ஸ்) - 1 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

    கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.

    செய்முறை

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மூக்கடலை அல்லது ராஜ்மாவை முதல்நாள் இரவே ஊறவைத்து விடவேண்டும். அடுத்தநாள் குக்கரில் சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.

    மேக்ரோனியை அகலமான அடி கனமான பாத்திரத்தில் உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறிவிட்டு வேகவைத்து அதில் உள்ள நீரை வடித்து விட்டு உடனே குளிர்ந்த நீரில் இரண்டுமுறை அலசினால் அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

    இப்பொழுது வானலியில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்ததும், உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு அத்துடன் பெருங்காயத்தூளையும் தூவி சிறிது உ.பருப்பு கலர் மாறியவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பாதி வதங்கியதுடன் தக்காளியையும் சேர்த்து, அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும்.

    பின்பு, வேக வைத்த மூக்கடலை அல்லது ராஜ்மாவையும் அத்துடன் மிளகாய் ஃப்ளோக்ஸ் சேர்த்து வதக்கவும்.

    கடைசியாக மேக்ரோனியை கலந்து மிகவும் லேசாக கிளறி கொத்தமல்லி தூவி இறக்கலாம்.

    கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து பரிமாறலாம்.

    இந்த மேக்ரோனி சுண்டலைக் கட்டாயம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிளகாய் சேர்க்க விரும்பாதவர்கள் மிளகு தூள் சேர்த்தும் சுண்டல் செய்யலாம்.

    ×