search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • வெள்ளை குருமாவை 10 நிமிடத்தில் மிக எளிதாக செய்துவிடலாம்.
    • சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

    எல்லா காய்கறி மற்றும் சிக்கன், மட்டன் ஆகியவற்றை வைத்து குருமா செய்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக பேபிகார்ன் வைத்து ஒரு கிரீமியான ஒயிட் கிரேவி செய்யலாம். இந்த வெள்ளை குருமாவை வெறும் 10 நிமிடத்தில் மிக எளிதாக செய்துவிடலாம்.

    இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும். சரி வாங்க பேபிகார்ன் ஒயிட் கிரேவி எப்படி செய்யணும், இதற்கு என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் போன்ற விவரங்களை நாம் இப்பொழுது பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    பேபி கார்ன் -5

    பட்டானி- 100 கிராம்

    தேங்காய்- ஒரு கப்

    கசகசா- ஒரு ஸ்பூன்

    சோம்பு ஒரு ஸ்பூன்

    உடைத்த கடலை- ஒரு ஸ்பூன்

    முந்திரி- 5

    பட்டர்- ஒரு ஸ்பூன்

    பட்டை-1

    லவங்கம்- 2

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    பச்சைமிளகாய்

    கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    முதலில் ஒயிட் கிரேவிக்கு செய்வதற்கு ஒரு மிக்சி ஜாரில் தேங்காய், கசகசா, சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம், பச்சைமிளகாய், முந்திரி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பட்டர் சேர்த்து அதில் பட்டை, லவங்கம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

    பின்னர் வெட்டி வைத்துள்ள பேபிகார்னை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பட்டானி, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அதனுடன் நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு கொதிக்க விட வேண்டும். ஒரு கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் கிரீமியான பேபிகார்ன் ஒயிட் கிரேவி தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற உணவுகளுக்கு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • பிரியாணி மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது.
    • குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள்.

    பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாவின் சுவை அனைவருக்கும் பிடித்தமானது தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மதியம் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்பினால் கண்டிப்பாக டிபன்பாக்ஸ் காலியாக வரும் என்பது உறுது. காலை உணவு அல்லது இரவு உணவு சமைக்கும் பொழுது இப்படி ராகி சேமியாவில் ஒரு பிரியாணி செய்து கொடுத்தால் குழந்தைகள் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். வாருங்கள் ராகி சேமியா பிரியாணியை எப்படி என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ராகி சேமியா — 1 கப்

    பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு – 1/2 கப்

    பச்சை பட்டாணி – 1/4 கப்

    பெரிய வெங்காயம் – 2

    தக்காளி – 1

    பட்டை – 1

    ஏலக்காய், கிராம்பு – 2

    கரம் மசாலா துாள் – 1/2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்

    மஞ்சள் துாள் – 1/4 தேக்கரண்டி

    மிளகாய் துாள் – 1/2 மேஜைக்கரண்டி

    எண்ணெய், கல் உப்பு, கொத்தமல்லி தழை,

    புதினா – தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில், எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளிக்க வேண்டும். அதில் வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலாத்துாள், தக்காளி, பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு, புதினா, போட்டு வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு கப் நீர் ஊற்ற வேண்டும்.

    நீர் கொதித்தவுடன், ராகி சேமியாவைப் போட்டு கிளறி, அடுப்பை, `சிம்'மில் வைத்து, கொத்தமல்லி தழை துாவினால், ராகி சேமியா பிரியாணி தயார். சாப்பிட சுவையாக இருக்கும்; ராகி சேமியா சாப்பிடாத குழந்தைகள் இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவர்.

    • சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.
    • பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை.

    ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்க நல்ல மருந்து. பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியவை. ஆவாரம்பூ உடல் சூடு தணிக்கும், நாவறட்சி நீக்கும், கண் எரிச்சல் தீர்க்கும். மூலநோய் குணமாக உதவும். சருமப் பொலிவுக்கு உதவும். உடலை பலப்படுத்தும். சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.

    தேவையான பொருட்கள்:

    ஆவாரம்பூ - ஒரு கைப்பிடி

    தேங்காய்த்துருவல்-ஒரு கப்

    காய்ந்த மிளகாய் -2

    புளி, உப்பு - சிறிது

    பூண்டு - 2 பல்

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    கடுகு - கால் டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்க வேண்டும். அதில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பூண்டு, ஆவாரம்பூ, புளி, உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு, கருகிவிடாமல் வதக்க வேண்டும்.

    ஆறிய பிறகு, மிக்சியில் அரைத்தெடுக்க வேண்டும். தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.

    குறிப்பு:

    ஃப்ரெஷ் ஆவாரம்பூ கிடைக்கவில்லை என்றால், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற உலரவைத்த பூவையும் பயன்படுத்தலாம்.

    • சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும்.
    • சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள். அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். சமையல் ருசியாக இருக்க கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக...

    சமையலில் செய்யக்கூடாவதவை

    * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

    * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

    * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

    * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

    * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

    * சூடாக இருக்கும் போது எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

    * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

    * ஃபிரிட்ஜில் வாழைப்பழமும் உருளைக்கிழங்கும் வைக்கக்கூடாது.

    * பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

    * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

    * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

    * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

    செய்ய வேண்டியவை..!

    * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

    * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

    * ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

    * போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

    *குருமாவை இறக்கும் போது கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

    * பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

    * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

    * வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.

    * கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.

    * வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

    • நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
    • நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும்.

    நண்டு சப்பிடுவதால், வைட்டமின் ஏ கிடைக்கிறது. இது கண்பார்வை மேம்படவும், கண் புரை, கருவிழி சிதைவு ஆகிய நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் என்று சொல்லப்படுகிறது. இதில் காப்பர், வைட்டமின் பி2, செலினியம் ஆகியவை காணப்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நண்டு சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. இதில் காணப்படும் செலினியம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்குவிக்க உதவும். நண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானம் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.

    காயங்கள் விரைந்து குணமாகவும், நண்டு உணவுகள் கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள ஜின்க், வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்றவை எரித்ரோசைடுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்வை என்றும், இது புதிய திசுக்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. நண்டு உணவில் உள்ள ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 1

    இஞ்சிபூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    கரம்மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்

    பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்

    மைதா மாவு- ஒரு ஸ்பூன்

    பிரெட் தூள்- தேவையான அளவு

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    கொத்தமல்லித்தழை, எண்ணெய்- தேவையான அளவு,

    உப்பு- தேவையான அளவு.

    செய்முறை

    முதலில் கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் நண்டுகளை போட்டு வேக வைக்க வேண்டும்.

    நண்டு நன்றாக வெந்ததும், ஆறவைத்து ஓடுகளை உடைத்து சதைகளை மட்டும் தனியாக எடுத்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கரம்மசாலாதூள், மஞ்சள்தூள், மைதா மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, இதில் இருந்து கொஞ்சமாக எடுத்து லாலிபாப் வடிவில் செய்து அதில் குச்சியோ அல்லது நண்டின் கால்களையோ வைக்கலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் முட்டையை அடித்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் பிரெட் தூள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    எண்ணெய் சூடானதும், ஒரு லாலிபாப்பை எடுத்து, முட்டையில் முக்கி எடுத்து பின்னர் பிரெட் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான நண்டு லாலிபாப் தயார்.

    • வத்தக்குழம்பில் உப்பு அதிகமானால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவையும் கூடும்.
    • பிரிஞ்சி இலையை பொடித்து மூலை முடுக்குகளில் போட்டால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

    * வெந்தயக்கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் உடல் சுத்தமாகும். குடல் புண்கள் குணமாகும். மலச்சிக்கலையும் போக்கும்.

    * பருப்புக்கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக உள்ளன. நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கும் வல்லமை இதற்கு உண்டு. உடலில் உள்ள கொழுப்புகளையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது. வெந்நீர் மற்றும் வியர்வையால் ஏற்பட்ட கொப்புளங்கள், தீக்காயங்களுக்கு பருப்புக்கீரையை அரைத்து தடவ குணம் பெறும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்து முடித்த பின்பு வேர்க்கடலையை பொடித்துப்போட்டு கலந்தால் சுவை கூடும். பொரியல் மீதமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்து சாப்பிடலாம்.

    * பூண்டு, வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் உப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாடை வீசாது.

    * பிரெட், பர்பி, மைசூர் பாகு போன்றவைகளை வெட்டும் கத்திகளை சூடாக்கி வெட்டினால் பிசிறு இல்லாமல் அழகான துண்டுகள் கிடைக்கும்.

    * பால் திரிந்துவிட்டால் அதை வீணாக்காமல் வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி நகைகள், கொலுசுகளை அதில் 15 நிமிடங்கள் ஊற வைத்து தேய்த்து எடுத்து துணியால் துடைத்துவிட்டால் புதிது போல 'வெள்ளி' மின்னும்.

    * பிரிஞ்சி இலைகளை பொடித்து சமையலறை மூலை முடுக்குகளில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

    * வத்தக்குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்தால் சரியாகிவிடும். சுவையும் கூடும்.

    * பூரி உப்பலாக சில மணி நேரம் இருக்க, ரவை ஒரு ஸ்பூன், பச்சரிசி மாவு ஒரு ஸ்பூன் கலந்து கோதுமை மாவை கெட்டியாகப் பிசைந்து ஊற விடாமல் உடனே தடிமனாக தேய்த்து பொரித்து எடுக்கவும். உப்பலான சுவையான பூரி கிடைக்கும்.

    * தக்காளி சீக்கிரமாக வதங்க, சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்தால் போதும்.

    * சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் அதனுடன் சிறிது உப்பு, சீரகம், மிளகு கலந்து சூப் போல பருகலாம். உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் மிகுதியாக கிடைக்கும்.

    * பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிவிட்டு, எலுமிச்சை சாறில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பத்திரபடுத்தி தயிர் சாதத்திற்கு எண்ணெய்யில் பொரித்தும், பொரிக்காமலும் சாப்பிடலாம். ருசி அமோகமாக இருக்கும்.

    * சேப்பங்கிழங்கை வேகவைப்பதற்கு முன்பு கத்தி கொண்டு ஆங்காங்கே கீறிவிட்டால் வேகவைத்த பிறகு தோல் உரிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    * காபி, டீ கறை படிந்த பீங்கான் பாத்திரங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து கழுவினால் பளிச்சென்று இருக்கும். எலுமிச்சை தோலை தூக்கி எறியாமல் பிரிட்ஜில் பாதுகாத்து பயன்படுத்தலாம்.

    • ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டியை தான்.
    • சுவரொட்டியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

    ஆட்டுக்கறியை விட அதன் மற்ற உறுப்புகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன, குறிப்பாக ரத்த அளவை அதிகரிக்க பலரும் பரிந்துரைப்பது சுவரொட்டி எனும் மண்ணீரலைத் தான். ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ள நபர்கள் வாரம் ஒருமுறை இதை தவறாமல் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவது பலனைத் தரும். வயிற்றுப்புண், வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கும் அற்புதமான உணவு சுவரொட்டி தான். இந்த பதிவில் சுவரொட்டி வறுவல் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    மிளகு- ஒரு ஸ்பூன்

    சீரகம்- ஒரு ஸ்பூன்

    சோம்பு- ஒரு ஸ்பூன்

    சுவரொட்டி- 2

    சின்ன வெங்காயம்- 10

    இஞ்சி, பூண்டு விழுது- தேவையான அளவு

    கரம் மசாலா தூள்- அரை டீஸ்பூன்

    பெருஞ்சீரகம்- அரை டீஸ்பூன்

    தேங்காய்- சிறிதளவு

    நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்

    செய்முறை:

    மட்டன் கடையில் சுவரொட்டியை வெட்டாமல் வாங்கி வர வேண்டும், அதனை நன்றாக சுத்தம் செய்த பிறகு குக்கரில் போட்டு 2 விசில் வரை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சி ஜாரில் பொடித்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்ததும், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, லவங்கப்பட்டை கருவேப்பில்லை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு சுவரொட்டியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தண்ணீர் சேர்க்க வேண்டாம், இதனுடன் கரம் மசாலா தூள், நாம் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு பொடியை சேர்க்க வேண்டும்.

    பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும், கடைசியாக நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வறுவல் தயார்.

    • அல்வாவின் இனிப்புச் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை.
    • எந்த ஸ்வீட் கடைக்குப் போனாலும் அல்வா நிச்சயம் இருக்கும்.

    நாக்கில் வழுக்கிக்கொண்டு போகும் இதன் இனிப்புச் சுவைக்கு மயங்காதவர்களே இல்லை. திருநெல்வேலி இருட்டுக்கடை தொடங்கி, மதுரைப் பக்கம் திருவிழாக்களில் கிடைக்கும் `அல்வா' வரை இதை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ரசிகர்களே அதிகம். எந்த ஸ்வீட் கடைக்குப் போனாலும் நிச்சயம் இது இல்லாமல் இருக்காது என்பதே அல்வாவின் பெருமைக்குச் சான்று. அல்வா என்றால் நாவில் வைத்தவுடன் கரைய வேண்டும். அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இன்று சுவையான அனானசி பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அன்னாசிப்பழம் - 250 கிராம்

    பாதாம் - 250 கிராம்

    முந்திரி - 15 கிராம்

    பால்கோவா - 150 கிராம்

    சர்க்கரை - 125 கிராம்

    நெய் - 150 கிராம்

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    செய்முறை

    முதலில் அன்னாசி பழத்தின் தோலை சீவி அதை நன்றாக சுத்தமாக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமாக பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சம் நெய் ஊற்றி அது சூடாகியதும் வெட்டிய அன்னாசி பழ துண்டுகளை சேர்த்து பழத்தில் உள்ள ஈரம் வற்றும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

    மீண்டும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பாதாம் பருப்பை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விடலாம். இதன் பிறகு பாதாம் பருப்பை இறக்கி அதில் உள்ள தோலை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த பாதாமை நாம் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள அன்னாசி பழத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    பின்னர் இதனுடன் தேவையான அளவு சக்கரை மற்றும் பால்கோவா சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுகொண்டே இருக்க வேண்டும். இது நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் பாதாமை நறுக்கி மேலே போட்டு அலங்கரித்து எடுத்து பரிமாறலாம். சுவையான தித்திப்பான அன்னாசி, பாதாம் அல்வா ரெடி.

    • வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்.
    • பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்காக செய்துகொடுக்கலாம்.

    வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சற்று வித்தியாசமாக மொறு மொறு சுவையில் எக் ஃபிரான்கி ஃபிரை தயார் செய்யலாம். எப்போதும் சமோசா அல்லது சப்பாத்தி ரோல், ஸ்பிரிங் ரோல் போன்று செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி டிரை பண்ணிப்பாருங்க. உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவர். பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்காக செய்துகொடுக்கலாம். நிச்சயமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 100 கிராம்

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    உருளைக்கிழங்கு- 4

    முட்டை - 2

    எள்ளு- 1/4 தேக்கரண்டி

    கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    மிளகுத்தூள் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு முட்டையை 4 பாகமாக வருமாறு வெட்டிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு கோதுமை மாவில் உப்பு மற்றும் எள் அல்லது சோம்பு சேர்த்து கலந்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவினை சப்பாத்தி மாதிரி வட்டமாக திரட்டிக்கொள்ள வேண்டும்.

    இப்போது மசாலா தயார் செய்யலாம். வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், கரம்பசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நாம் ஏற்கனவே திரட்டி வைத்துள்ள சப்பாத்திக்கு மேல் இந்த மசாலா கலவைகளை பரப்பி விட வேண்டும். பிறகு பீட்ஸா கட்டர் கொண்டு வட்ட வடிவமான சப்பாத்தியை 6 பாகங்களாக வருமாறு வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டிய பாகங்களில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை வைக்க வேண்டும். பின்னர் இதனை சுருள் போல உருட்டி அதன் ஓரங்களை மசாலா வெளியே வராதவாறு ஒட்ட வேண்டும். இப்போது சமோசாக்கள் தயார்.

     அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்க வேண்டும். சுவையான எக் ஃபிரான்கி ஃபிரை தயார். குழந்தைகள் மிகவும் விரும்புவர்.

    • வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான குளிர்பானம் தான் ரோஸ் மில்க்.
    • இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள்.

    வெயில் காலம் வந்து விட்டது. நம்முடைய வீட்டிலேயே குளிர்பானங்களைத் தயாரித்து குடிப்பது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அந்த வரிசையில் எல்லோர் வீட்டிலும் செய்யக்கூடிய ஒரு குளிர்பானம் தான் இந்த ரோஸ் மில்க். பாலை காய்ச்சி, சர்க்கரையை போட்டு, ரோஸ் எசன்ஸ் ஊற்றி கலக்கினோம் என்று இல்லாமல், இதற்கென்று ஒரு பக்குவம் உள்ளது. முறையாக இதுமாதிரி வித்தியாசமான ரோஸ் மில்க்கை ஒருமுறை செய்து பருகிப் பாருங்கள். இதனுடைய சுவைக்கு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு சுவைமிகுந்த ரோஸ்மில்க் சாகோ டிரிங்க்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    ஜவ்வரிசி- ஒரு கப்

    ரோஸ்மில்க் எசன்ஸ்- தேவையான அளவு

    அகர் அகர்- ஒரு ஸ்பூன்

    கண்டன்ஸ்டு மில்க்- ஒரு கப்

    சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்

    சர்க்கரை- ஒரு கப்

    செய்முறை:

    முதலில் ஜவ்வரிசியை வேகவைத்து அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் அகர் அகர் சேர்த்துய் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அதில் பால், சர்க்கரை மற்றும் ரோஸ் மில்க் எசன்ஸ், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து அதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணிநேரத்துக்கு வைக்க வேண்டும். இதனை ஒரு மணிநேரத்துக்கு பிறகு ஜெல்லிகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ரோஸ்மில்க் ஜெல்லி தயார்.

    பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பால் ஆறியதும் அதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அந்த பாலில் வேகவைத்த ஜவ்வரிசி, சிறிது சிறிதாக வெட்டிவைத்துள்ள ரோஸ்மில்க் ஜெல்லி, ஊறவைத்த சப்ஜா விதை சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து சில்லென்று பருகலாம். இந்த கோடை காலத்திற்கு ஏற்ற சுவையான ரோஸ்மில்க் சாகோ டிரிங்க் ரெடி. நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

    • ஃபிரஷ்ஷான தயிர் இருந்தா இந்த ஸ்வீட்டை செய்து பாருங்கள்.
    • வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும்.

    வீட்டில் ஃபிரஷ்ஷான தயிர் இருந்தா இந்த ஸ்வீட்டை செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும், வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவுக்கு அருமையாக இருக்கும். இந்த கோடை காலத்தில் சில்லென்று சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    தயிர்- 1 லிட்டர்

    கண்டன்ஸ்டு மில்க்- 200 கிராம்

    ஏலக்காய் தூள்- இரு சிட்டிகை

    குங்குமப்பூ- சிறிதளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் வெள்ளை துணி போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது கெட்டியான தயிர் கிடைக்கும். இந்த தயிரை நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கெட்டி இல்லாமல் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

    இந்த கலவையில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள், மற்றும் குங்குமப்பூ கலந்த பால் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதனை கிண்ணங்கள் அல்லது கேக் மோல்டு இவற்றில் வெண்ணெய் தடவி அதில் ஊற்ற வேண்டும். இதனை அலுமினிய பேப்பர் கொண்டு மூடி இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான ஸ்வீட் ரெடி.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை பயன்படுத்தி பிரியாணி செய்து பார்க்கலாம்.

    பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா பிரியாணி, பாஸ்மதி அரிசி பிரியாணிகளை தான் நாம் சுவைத்திருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக சேமியாவை பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சேமியா குலையாமல் தனித்தனியாக பொல பொல வென்று எப்படி வரும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா -1 பாக்கெட்

    சிக்கன்- 150 கிராம்

    பெரிய வெங்காயம் -2

    தக்காளி -2

    பச்சை மிளகாய் -3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் ஸ்பூன்

    பட்டை -1 இன்ச்

    பிரியாணி இலை -1

    கிராம்பு - 2

    ஏலக்காய் 2

    மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்

    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

    கரம் மசாலா - கால் ஸ்பூன்

    கொத்தமல்லி புதினா -சிறிதளவு

    தயிர் -50 மில்லி

    நெய் -2 ஸ்பூன்

    எண்ணெய் -4 ஸ்பூன்

    உப்பு- தேவையான அளவு

    புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

    செய்முறை

    முதலில் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் சேமியாவை சேர்த்து அதிலே ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து 70 சதவீதம் வேகவிட வேண்டும். பின்னர் அதை தனியாக எடுத்து ஆற வைக்கவும், இப்படி வேக வைத்து ஆற வைத்தால்தான் சேமியா குலையாமலும் உதிரி உதிரியாகவும் வரும்.

    பின்னர் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை இவைகளையும் சேர்த்து தாளிக்கவும். பிறகு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பிறகு புதினாவும் கொத்தமல்லியும் சேர்த்து நன்கு கிளறவும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு தயிரையும் சேர்க்க வேண்டும்.

    அதன்பிறகு எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்த பிறகு சேமியாவை சேர்த்து பட்டும் படாமல் கிளறி விட்டு, நெய் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து எடுத்து கிளறி இறக்கினால் சுவையான கம கம வென சேமியா பிரியாணி ரெடி.

     சேமியா உப்புமா என்றாலே ஒரு சிலருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆகவே சேமியாவை வைத்து இந்த முறையில் பிரியாணி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். நீங்களும் செய்து பார்த்து சுவைத்து பாருங்கள்.

    ×