search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ஏற்க மறுப்பு:  சட்டசபைக்கு செல்ல முடியாது
    X

    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ஏற்க மறுப்பு: சட்டசபைக்கு செல்ல முடியாது

    புதுவையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்துவிட்டதால் 23-ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின்பேரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியும்.

    புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை கடந்த ஜூலை 4-ந்தேதி மத்திய உள்துறை நியமித்தது.

    புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும்படி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் அளித்தனர். இந்த கடிதத்தை ஆய்வு செய்து அழைப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அன்றைய தினம் இரவோடு, இரவாக கவர்னர் கிரண்பேடி 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் தங்களுக்கு இருக்கை, அலுவலகம் உள்ளிட்ட சலுகைகளை ஒதுக்கித்தரும்படி சட்டமன்ற செயலர் வின்சென்ட்ராயரிடம் கடிதம் அளித்தனர். இந்த கடிதத்தை ஆய்வு செய்து உரிய பதிலளிப்பதாக சட்டமன்ற செயலர் கூறியிருந்தார்.

    இதையடுத்து அதிகாரம் படைத்த நபரிடம் இருந்து உரிய உத்தரவு வராததால் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்க முடியாது என சட்டமன்ற செயலகம் 3 பேருக்கும் கடிதம் அனுப்பியது.

    இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களை மத்திய உள்துறை நியமித்தது செல்லாது என அறிவிக்கக்கோரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயவேணி சபாநாயகரிடம் நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. எனவே இந்த நியமனத்தை அங்கீகரிக்கக்கூடாது என கடிதம் அளித்தார்.

    இதேபோல அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், சட்டவிரோதமாக எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை அங்கீகரிக்கக்கூடாது என்றும் கடிதம் அனுப்பினார்.

    இதன்பின் சபாநாயகர் வைத்திலிங்கம் தன் மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். 3 மாத அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடிந்து கடந்த அக்டோபர் 30-ந்தேதி புதுவைக்கு சபாநாயகர் திரும்பினார்.


    இதனிடையே பா.ஜனதா கட்சியினர் நியமன எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து புகார் செய்தனர். மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை அரசுக்கு நேரடியாக நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக கடிதமும் அனுப்பியது. அதில் 3 எம்.எல்.ஏ.க்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் சபாநாயகர் எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை ஏற்பாரா? நிராகரிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. கடிதங்களை ஆய்வு செய்து ஓரிருநாளில் முடிவெடுப்பேன் என சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.

    இத்தகைய சூழலில் சட்டசபை செயலகம் இன்று 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. சட்டமன்ற செயலர் வின்சென்ட ராயர், நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டம், புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963 ஆகியவற்றிற்கு மாறாக 3 நியமன உறுப்பினர்கள் உரிய அதிகாரம் படைத்த நபரால் நியமிக்கப்படவில்லை. நியமனமே செல்லாது என்ற சூழலில், கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் என்பதற்காக உங்களை எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க முடியாது. எனவே எம்.எல்.ஏ.க்களின் சலுகைகள் கோரிய உங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் வைத்திலிங்கத்தின் உத்தரவின்படி இந்த கடிதத்தை சட்டசபை செயலர் அவர்கள் 3 பேருக்கும் அனுப்பியுள்ளார். மேலும் இந்த கடிதத்தின் நகல் அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சபாநாயகர் நிராகரித்து இருப்பதால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் 23-ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×