

நெல்லை:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி வருகிறார்கள். ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை சுமார் 15 பேர் பலியாகி உள்ளனர். தற்போது டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சுமார் 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் வைரஸ் காய்ச்சல் காரணமாக சுமார் 200 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ், சலவை தொழிலாளி. இவரது மகள் கீர்த்திகா (7). இவள் கடந்த 28-ந்தேதி டெங்கு காய்ச்சல் காரணமாக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு கீர்த்திகா பரிதாபமாக பலியானார். ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள குருவன் கோட்டை, முத்துகிருஷ்ணாபுரம் உள்பட பல ஊர்களில் ஏராளமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.