

பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டியூர் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குமார். அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
இவரது மகன் சந்தோஷ் (வயது10). இவன் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக சந்தோசுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.
பல மருத்துவர்களிடம் காண்பித்தும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் டெங்கு பாதிப்பு இருந்ததை கண்டறிந்தனர்.
தனி வார்டு அமைத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக இறந்தான்.