

ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் அண்மையில் வெளியிட்ட எக்ஸ் பதிவு தொழில்நுட்ப வட்டாரத்தில் பேசுபொருளாகி வருகிறது.
ஏஐ கருவிகள் நொடிகளில் Code-களை எழுதும் இன்றைய சூழலில், பல மணிநேரம் கண்விழித்து ஒவ்வொரு வரியாக செதுக்கிய டெவலப்பர்களின் உழைப்பிற்கு ஆல்ட்மேன் நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "மிகவும் சிக்கலான மென்பொருள்களை ஒவ்வொரு எழுத்தாக செதுக்கிய மனிதர்களுக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன். அந்த உழைப்பின் அளவை நினைவுகூர்வதே இப்போது கடினமாக உள்ளது. எங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ கருவிகளால் இன்று வேலைகள் எளிதாகிவிட்டாலும், இந்த ஏஐ தொழில்நுட்பம் உருவாவதற்கு அடித்தளமிட்டது மனித டெவலப்பர்களின் கடின உழைப்புதான் என்பதை அவர் இதன் மூலம் அங்கீகரித்துள்ளார்.
இதற்கிடையே மென்பொருள் துறையில் நுழையும் ஆரம்பக்கட்ட பணியாளர்களுக்கு ஏஐ ஒரு சவாலாக மாறியுள்ளது.
முன்பு தொடக்க நிலையில் வழங்கப்பட்ட எளிய வேலைகளை இப்போது ஏஐ செய்வதால், புதியவர்கள் அனுபவம் பெறுவது கடினமாகலாம் எனக் கருதப்படுகிறது.
ஆனால் புதிய ஆய்வின்படி, கணிதம் மற்றும் கணினி சார்ந்த பணிகளில் 94% வேலைகளை ஏஐ செய்ய முடியும் என்றாலும், நடைமுறையில் 33% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.