search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arif Mohammad Khan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
    • ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

    பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர்களை கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தள்ளுவதாக இந்திய மாணவர் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், எனக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறார்.

    அவர்கள் என் அருகில் வராமல் இருக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார். என்னை தொட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அவருக்கு தெரியும். இனி நான் பயப்பட மாட்டேன் என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும். அவர் அனைவரையும் பலி கொடுக்க விரும்புகிறார். காவல்துறையினரை துன்புறுத்துவதும், இளைஞர்களை சுரண்டுவதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.

    • ஆவணப்படம் காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
    • நீதித்துறையின் தீர்ப்புகளை விட ஒரு ஆவணப்படத்தை மக்கள் சிலர் நம்புவதாக கேரள கவர்னர் தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    2002-ம் ஆண்டு குஜராத்தில் மதக்கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானார்.

    இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடிக்கான கேள்விகள், என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

    ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது. இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.

    ஆனால், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிபிசி ஆவணப்படம் குறித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கவர்னர் ஆரிப், 'உலகம் முழுவதும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால், இந்த மக்கள் (பிபிசி செய்தி நிறுவனம்) மிகவும் கவலைப்படுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை?. நமது மக்களில் சிலரை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால் நீதித்துறையின் தீர்ப்புகளை விட ஒரு ஆவணப்படத்தை அவர்கள் நம்புகின்றனர்' என்றார்.

    ''ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள தருணம் இது. ஆவணப்படத்தை வெளியிட ஏன் இந்த குறிப்பிட்ட தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டது? குறிப்பாக, நமது சுதந்திரத்தின் போது, இந்தியாவால் அதன் சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது, இந்தியா துண்டு துண்டாக உடைந்து விடும் என்று கணித்தவர்களிடம் இருந்து இந்த முயற்சி வந்துள்ளது'' என்றும் கேரள ஆளுநர் கூறினார்.

    • கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் கவர்னருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
    • 15-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்து உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும், மாநில கவர்னருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு முனைப்புகாட்டி வருகிறது.

    இந்த நிலையில் கவர்னரை கண்டித்து வருகிற 15-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்து உள்ளது.

    இந்தநிலையில், கேரளாவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செயல்படுவதாக கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறியிருந்தார். மேலும் பொது விவாதம் நடத்த தயார் என்றும், கவர்னர் மாளிகைக்கு வந்து பாருங்கள் எனவும் சவால் விடும் வகையில் கருத்துகளை கூறி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரளாவில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியாததால், அவர்களது குதிரை பேரம் நடக்காததால், அரசியல் சாசனத்திற்கு எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • கேரள அரசையும், பினராயி விஜயனையும் கவர்னர் ஆரிப் முகமது கான் கடுமையாக தாக்கி பேசினார்.
    • முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் சில மந்திரிகளும் கவர்னரை கடுமையாக விமர்சித்தனர்.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும், கேரள அரசுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி கேரள அரசையும், முதல்-மந்திரி பினராயி விஜயனையும் கவர்னர் ஆரிப் முகமது கான் கடுமையாக தாக்கி பேசினார்.

    அதற்கு பதிலடியாக முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் சில மந்திரிகளும் கவர்னரை கடுமையாக விமர்சித்தனர். அதைத்தொடர்ந்து தன்னை தரக்குறைவாக விமர்சிக்கும் அமைச்சர்களை பணிநீக்கம் செய்து விடுவேன் என்று கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கேரள பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடந்த ஒரு விழாவில் கடந்த 18-ந்தேதி நிதி மந்திரி கே.என்.பாலகோபால் மற்றும் உயர்கல்வி மந்திரி ஆர்.பிந்து ஆகியோர் பேசிய போது தெரிவித்த கருத்துகள் கவர்னர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் இருக்கிறது. எனவே, நிதி மந்திரியின் கருத்துகள் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை குலைக்கும் வகையில் உள்ளது.

    அவரின் இந்த கருத்து கேரளாவிற்கும், பிற மாநிலங்களுக்கும் இடையே பிளவை உருவாக்கும் வகையில் உள்ளது. மேலும் அவரின் அறிக்கையில் அவர் என்னிடம் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதற்கு சற்றும் குறைவானது இல்லை. இந்த விவகாரத்தை முதல்-மந்திரி கவனமுடன் பரிசீலித்து அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    அதேநேரம் முதல்-மந்திரி பினராயி விஜயன் கவர்னரின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரப்பூர்வ வட்டாரம் மூலம் தெரியவந்துள்ளது.

    மேலும், பாலகோபால் மீதான நம்பிக்கை இன்னும் குறையாமல் அப்படியே இருப்பதாகவும் முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயன் உடனடியாக கவர்னருக்கு கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    • கவர்னர் ஆரிப் முகமது கான் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து வருகிறார்.
    • பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவை போல் இயங்கி வருகிறார்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையீடு போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், விளக்கம் கேட்டும் கவர்னர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் நோட்டீசு அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவு கேரள அரசை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பாலக்காட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் ஆரிப் முகமது கான், கவர்னருக்கான பணிகளை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் கற்பனை செய்து கொண்டு, ஒரு சர்வாதிகாரி போல் நடந்து வருகிறார்.

    அவரது நடவடிக்கைகளை பார்க்கும்போது, கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவை போல் இயங்கி வருகிறார். தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜஸ்ரீ நியமிக்கப்பட்டது செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட உத்தரவு. ஆனால், அந்த உத்தரவை பொதுவாக கருதி 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளதை என்னவென்று சொல்வது?.

    கவர்னர் கேரள அரசின் நிர்வாகத்துக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, தேவைப்பட்டால் அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்.

    அதேபோல் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னரை நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

    இந்தநிலையில் கவர்னரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று கேரளா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இன்றும் (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இடது முன்னணி ஒருங்கிணைப்பாளர் இ.பி. ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.

    • கவர்னர் பதவி என்பது அரசமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி.
    • மாநிலத்தில் செயல்படும் எதிர்கட்சிகளை போல கவர்னர் நடந்து கொள்கிறார்

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நீடித்து வருகிறது.

    கேரள சட்டசபையில் சமீபத்தில் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்-மந்திரியே செயல்பட வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    ஆனால் இந்த சட்டதிருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்க போவதில்லை என கவர்னர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார். மேலும் அவர் அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கவர்னர் தான் மாநில மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். எனவே கவர்னரின் அதிகாரத்தை மாநில அரசால் குறைக்க முடியாது. கடந்த 2019-ம் ஆண்டு கண்ணூர் பல்கலைக்கழக நிகழ்ச்சிக்கு சென்ற என் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. அப்போது போலீசார் அவர்களின் கடமையை செய்யவிடாமல் முதல்-மந்திரியின் தனி அலுவலர் தடுத்துள்ளார். இது எதிர்ப்பாளர்களின் குரலை ஒடுக்க அரசு முயற்சிப்பதை காட்டுகிறது, என்றார்.

    கவர்னர் ஆரிப் முகமது கானின் குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    கவர்னர் பதவி என்பது அரசமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி. அப்பதவியை தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடாது.

    மாநிலத்தில் செயல்படும் எதிர்கட்சிகளை போல கவர்னர் நடந்து கொள்கிறார். ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவாகவே அவர் நடந்து கொள்கிறார். கம்யூனிச கொள்கைக்கும், அதன் சித்தாந்தத்திற்கும் எதிராகவே நடந்து கொள்கிறார்.

    கேரளத்தில் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×