ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் சூர்யவன்ஷி நீக்கம்!

சூர்யவன்ஷியை நீக்காமல் தொடர்ச்சியாக போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும் - கே.ஸ்ரீகாந்த்
Suryavanshi
Published on
Summary

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூர்யவன்ஷி

இந்த ஆட்டத்தில் இளம் வீரரான சூர்யவன்ஷி நீக்கப்பட்டார். அபிஷேக் சர்மாவுடன், சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களம் இறங்கினார். சாம்சன் 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் அவர் இடத்தில் சூர்யவன்ஷி இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 15 வயதான சூர்யவன்ஷியை முதல் போட்டியில் நீக்கியது தொடர்பாக பயிற்சியாளர் காம்பீர், அணி நிர்வாகத்தை இந்திய அணி முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கே.ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.

நியாயமற்ற முறை

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணி நிர்வாகம் சூர்யவன்ஷியை சரியாக நடத்தவில்லை. நியாயமற்ற முறையில் அவர் நடத்தப்பட்டார். முதல் ஆட்டத்தில் அவர் விளையாடாததை எனது மனைவியே கேள்வி எழுப்பினார்.

கடந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஒரு வீரர் ஏன் விளையாடவில்லை என்று வாதிட்டார். சூர்யவன்ஷி ஆடாததால் நாங்கள் ஒரு திரைப்படத்தை பார்க்க தொடங்கினோம்.

நீங்கள் சூர்யவன்ஷியை சரியாக கையாளவில்லை. இனி அவர் அடுத்த ஆட்டத்தில் விளையாடி ரன் ஏதும் எடுக்காவிட்டால் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்படுவோமோ என்று அவர் யோசிக்க நேரிடும்.

நிச்சயமற்ற தன்மை

இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை வைத்து விளையாடியது. அவர் மீது எனக்கு பரிதாபம் ஏற்படுகிறது. ஒன்று அவருக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பு அளித்து விட்டு பிறகு நீக்க வேண்டும். அல்லது சூர்யவன்ஷியை நீக்காமல் தொடர்ச்சியாக போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இந்திய அணி நிர்வாகம் செய்யும் தவறு என்ன வென்றால் இருவருக்கும் தலா 2 போட்டிகள் மட்டுமே கிடைக்கின்றன. இது அந்த வீரர்களுக்கு நல்லதல்ல. தொடக்க வீரர்களை அடிக்கடி மாற்றுவது அணியில் தங்கள் இடம் குறித்த நிச்சயமற்ற தன்மை வீரர்களிடம் ஏற்படுத்தும். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com