

பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த இளம் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஷபாலி வர்மா படைத்துள்ளார்.
மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாம் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 12 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய பிரதீகா ராவல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 18 பந்தில் 18 ரன்னும், தீப்தி சர்மா 14 பந்தில் 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில், இந்திய அணி 8.4 ஓவரில் 57 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன் எடுத்தபோது ஷபாலி வர்மா, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்தார்.
இதன்மூலம் 114 ஆட்டங்களில் இந்த இலக்கை எட்டிய அவர், அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.
மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 16-வது வீராங்கனையாகவும், இந்தியாவின் 3-வது வீராங்கனையாகவும் ஷபாலி வர்மா திகழ்கிறார்.