

நடப்பு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை ஷபாலி வர்மா முறியடித்தார்.
10-வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும், நந்தனி ஷர்மா 2 விக்கெட்டும், ஸ்ரீ சரணி, பிரேமா ராவத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அரை சதமடித்த ஷபாலி வர்மா ஆட்ட நாயகி விருது வென்றார்.
இந்நிலையில், இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனையாக ஷபாலி வர்மா சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
ஷபாலி வர்மா - 593 ரன்கள்
ஸ்மிருதி மந்தனா - 590 ரன்கள்
ஹர்மன்ப்ரீத் கௌர் - 465 ரன்கள்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - 345 ரன்கள்
ரிச்சா கோஷ் - 231 ரன்கள்