காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்தி - விஜயதரணி எம்எல்ஏ

விளவங்கோடு தொகுதியை எனக்குக் கொடுக்கக் கூடாது என்று 10 பேர் எதிா்ப்பு தெரிவிப்பதாக விஜயதரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
விஜயதரணி எம்.எல்.ஏ.
விஜயதரணி எம்.எல்.ஏ.
Published on

விளவங்கோடு:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட வில்லை.

விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதற்கு காங்கிரஸில் பலத்த எதிா்ப்பு எழுந்துள்ளதால் வேட்பாளா் அறிவிப்பு தாமதம் ஆகி வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவுக்கு விஜயதரணி செல்லப் போவதாகத் தகவல் பரவியது. இது குறித்து அவா் கூறியது:

விளவங்கோடு தொகுதியை எனக்குக் கொடுக்கக் கூடாது என்று 10 பேர் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். ஆனால், அத்தொகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். அவா்களின் கருத்து என்ன என்பதுதானே முக்கியம். இதை தலைமை அறியாமலா இருக்கும். எனக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் தலைமை தரும். காங்கிரஸை விட்டு விலகப் போவதாக வரும் தகவல் வதந்திதான் என்றாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com