

10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, சேலம் ஸ்பர்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதலில் இருந்தே சேலம் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து திணறியது.
7வது விக்கெட்டுக்கு இணைந்த ஹரிஷ்குமார்-ஈஸ்வர் ஜோடி 68 ரன்கள் சேர்த்தது.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் அரை சதம் கடந்து அசத்தினார். கடைசி ஓவரில் அவர் 4 சிக்சர்களை விளாசினார்.
இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்துள்ளது. ஹரிஷ்குமார் 57 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிலம்பரசன், பிரேம்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்குகிறது.