சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டுமா? கண்டிப்பாக மகாலட்சுமி வழிபாடு அவசியம்...

ஐஸ்வர்ய லட்சுமியை வணங்கினால் செல்வம் மட்டுமல்ல.. ஆரோக்யம், வெற்றி என 16 வளங்களும் கிடைக்கும்.இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டுமா? கண்டிப்பாக மகாலட்சுமி வழிபாடு அவசியம்...
Published on

வாழ்வில் மகிழ்ச்சி, மன நிம்மதியை தரக் கூடிய மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைப்பதற்கும், நம்முடைய வீட்டில் மகாலட்சுமி எப்போதும் வசிப்பதற்கும், அவளின் அருட் பார்வை நம்மீது பட்டுக் கொண்டே இருப்பதற்கு வீட்டில் சில எளிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். என்ன செய்தால் மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைக்கலாம் என்பதை பார்ப்போம்

ஒரு சமயம் சுரர் – அசுரர்கள் சேர்ந்து,பாற்கடலை கடைந்தனர். அப்போது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள். அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் அனைத்தும் தோன்றின.

அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள். இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.

பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள் தோன்றினார். தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும், முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

பாதங்களில் தேவர்கள் அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன. ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் கற்பக விருட்சம், விந்திய வாசினி எனும் துர்கை, சந்திரன், அப்சரஸ் ஆகியோர் நிற்கின்றனர்.

இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை இருக்கின்றன.

இந்த ஐஸ்வர்ய லட்சுமியை வணங்கினால் செல்வம் மட்டுமல்ல.. ஆரோக்யம், வெற்றி என 16 வளங்களும் கிடைக்கும்.

செல்வ வளம், சொத்துக்கள், அதிகாரம், அழகு, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்கு காரணமான தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். இந்துக்களின் வழிபாட்டு முறையில் விநாயகருக்கு அடுத்தபடியாக மகாலட்சுமி வழிபாட்டிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்க வேண்டும். எங்கெல்லாம் லட்சுமி தேவி இருக்கிறாளோ அந்த இடங்களில் துன்பம், வறுமை என்பது இருக்கவே இருக்காது. அதனால் அனைத்து வீடுகளிலும் லட்சுமி தேவியின் வழிபாட்டை அவசியம் செய்வதுண்டு.

மகாலட்சுமியின் வழிபாட்டிற்கு ஏற்ற நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி, நவராத்திரியின் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் நாளுக்குரிய தெய்வமாக கருதி வணங்கப்படுகிறாள். இந்த நாளில் அலை மகளான லட்சுமி தேவியை வழிபட்டால் ஆண்டுதோறும் வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு அவரின் படம் அல்லது சிலையை வீட்டில் வைத்து தொடர்ந்து உண்மையான பக்தியுடன் வழிபட்டு வர வேண்டும். இது தவிர எட்டு விதமான விஷயங்களை வீட்டில் செய்து வந்தால் மகாலட்சுமி நம்முடைய வீடு தேடி வருவாள்.

பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதங்கள் வரைதல், காயத்ரி மந்திர பாராயணம் செய்தல், நெய் விளக்கு ஏற்றுதல், தாமரை தண்டு திரி இட்டு விளக்கு ஏற்றுதல், வலம்புரி சங்கு வைத்து வழிபடுதல், துளசி செடியின் முன்பு விளக்கேற்றி வைத்து வழிபடுதல், புல்லாங்குழலை வீட்டில் வைத்திருத்தல், பசுக்களுக்கு உணவளித்தல் இது போன்ற வழிபாடுகளால் வீட்டின் செல்வ வளம் பெருக வைக்கும். வாழ்க்கையிலும் குடும்பத்திலும் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். பாவங்கள் அனைத்தும் நொறுங்கி சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்க பெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com