லட்சுமியை வாஞ்சையாக அழைத்த வாஞ்சிநாதர்

இங்கு நீராடினால் பஞ்ச மாபாதங்களும் ஒழிந்து நற்கதி பெறுவீர்.இங்குள்ள புஷ்கரணி `குப்த தீர்த்தம்’ என்ற பெயர் கொண்டது.
லட்சுமியை வாஞ்சையாக அழைத்த வாஞ்சிநாதர்
Published on

`கலியுகத்தில் மக்கள் தான் செய்த பாவங்களில் இருந்து விடுபட, காசிக்கு வந்து என்னில் நீராடி புனிதம் பெறுகிறார்கள். அதனால் காலங்காலமாய் பாவங்களை சுமந்து நான் பாவமூட்டையாக கனத்து விட்டேன். இதற்கென்ன விமோசனம்?' என்று கங்கா தேவி சிவபெருமானிடம் கேட்டாள்.

`சோழ நாட்டின் காவிரிக்கு தென்கரையில் ஸ்ரீவாஞ்சி என்ற புண்ணியத்தலம் உள்ளது. அங்கு நீ அந்தர்வாகினியாகச் சென்று புஷ்கரணியில் சேர்த்து விடு, உன்பாவமூட்டைகள் களையப்படுவதோடு உலகம் உய்வு பெற மக்கள் இங்கு நீராடினால் பஞ்ச மாபாதங்களும் ஒழிந்து நற்கதி பெறுவீர்' என்று அருளாசி கூறினார் கங்கைமணாளன்.

தன் ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் விட்டு விட்டு ஏனைய 999 கலைகளுடன் ஸ்ரீவாஞ்சியம் வந்தடைகிறாள் கங்கை அன்னை.

அந்தர்வாகினியாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வாழ்வதால் `குப்த கங்கை' என்ற பெயர் கொண்டாள். இந்த புஷ்கரணியும், `குப்த தீர்த்தம்' என்ற பெயர் கொண்டது.

கங்கையின் பாவச்சுமைகளையே போக்க வல்ல சக்தி வாய்ந்த ஸ்ரீவாஞ்சிய சேத்திரம், காசியை காட்டிலும் உன்னதமானதாகும். உயிரை மாய்த்திடும் பணியில் ஈடுபட்டிருக்கும் எமதர்மராஜன் தன் பணியின் கொடுமையினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிட, இத்தல ஈசனான வாஞ்சி லிங்கேஸ்வரரை வணங்கினார். அது முதல் எமனை சேத்திர பாலகராக நியமித்து, கோயிலின் அக்னி மூலையில் தனிக்கோயில் ஒன்றை நிர்மாணித்தார் ஈசன்.

தெற்கு நோக்கிய சந்நிதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, ஆலம் ஏந்தி இடக்காலை மடித்து வலக்காலைத்தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலை வடிவம் உள்ளது.

யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு, ஆனால், ஸ்ரீ வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.

இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களை யெல்லாம் கீழே வைத்து விட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார், எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், 'காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது' என முனிவர்கள் கூறுகின்றனர். பிரம்மாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு சமயம், திருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் ஊடல் ஏற்பட்டது. தேவி கண்காணாத தொலைவுக்குச் சென்று விடுகிறாள். அவளில்லாமல், திருமால் தவிக்கிறார். நல்லதொரு முடிவைக் கண்டிட மைத்துனன் சிவபெருமானை அணுகுகிறார் திருமால்.

இந்த நிலை கண்ட கயிலை நாதன் தேவியை அணுகி `உலகெல்லாம் போற்றித் துதிக் கப்படும் தேவி நீ இல்லையென்பதால், பொலிவிழந்து காணப்படுகிறது. தேவி! தயை கூர்ந்து உனது கணவனுடன் வாஞ்சையாக இருந்திட வருவாய்!' என்று இறைஞ்சி கேட்கிறார் மகாதேவன்.

பிரிவால் வாடி இருந்த அன்னைக்கு இந்த அழைப்பு. ஆறுதலாக இருந்தது. கணவனுடன் சேர்ந்திட மன மகிழ்ந்து ஒப்புக்கொள்கிறாள்.

லட்சுமி தேவியை வாஞ்சையுடன் அழைத்தமையால், ஈசன் வாஞ்சி நாதேஸ்வரர் ஸ்ரீவாஞ்சி லிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களைப் பெற்றார். இந்த தலத்திற்கு `ஸ்ரீவாஞ்சியம்' என்ற தலப்பெயரும் கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com