அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால் வெறிச்சோடி காணப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை குறைவாக இருந்ததால் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படுவதை படத்தில் காணலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படுவதை படத்தில் காணலாம்.
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் வழிபாடு செய்ய தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி வார இறுதி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நேற்று முதல் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கியது. அதைத்தொடர்ந்து நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று குறைந்த அளவிலான பக்தர்களே சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாததால் வேகமாக சென்று எளிதாக சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com