சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா: திருச்செந்தூரில் தெப்ப உற்சவம்

வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளி, தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் தெப்ப உற்சவம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

11-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி, சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்தை சென்றடைந்தனர். அங்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி- அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி, வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபத்துக்கு வந்தனர். அங்கு இரவில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது. வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் எழுந்தருளி, தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் சுவாமி- அம்பாள் மஞ்சள் நீராட்டு கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்தனர். பின்னர் இரவில் சுவாமி- அம்பாள் தனித்தனி மலர் கேடய சப்பரங்களில் வீதி உலா சென்று கோவிலை சேர்ந்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com