பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது
Published on

பழனி:

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனியில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து யானைப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி கோவில் யானை கஸ்தூரி யானைப்பாதை வழியே அசைந்தாடி சென்றதை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பார்த்து பரவசமுடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம்நாளான 18-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.

பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

விழாவின் 7-ம் நாளில் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com