முன்வினையால் ஏற்படும் துன்பங்கள்

சீதை, தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.
முன்வினையால் ஏற்படும் துன்பங்கள்
Published on

ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால், அவர்களை நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும் கூட காரணமாக இருக்கலாம். ஆகையால் நமக்கு வந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர, நமக்கு துன்பம் விளைவித்தவர்களின் மீது கோபம் கொண்டு அவர்களை பழி வாங்க நினைக்கக்கூடாது.

ராமாயண இதிகாசத்தில், அனுமனிடம் இதுபற்றி சீதைபிராட்டி சொன்ன விஷயத்தை இங்கே பார்க்கலாம்..

ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதை, அசோகவனத்தில் பலம் பொருந்திய பல அரக்கிகளின் நடுவே கடும் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த அரக்கிகள், ராவணனின் விருப்பத்திற்கு அடிபணியும்படி சீதையை தினமும் துன்புறுத்தி வந்தனர். ஆனால் அதற்காக சீதை, அந்த அரக்கிகள் மீது கோபம் கொள்ளவில்லை. தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம், தான் செய்த முன்வினைப் பயன்தான் என்று நம்பினார்.

சீதையை திருப்பி அனுப்பும்படி, ராமபிரான் பல முறை ராவணனுக்கு தூது அனுப்பியும் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். அந்தச் செய்தியை, அசோகவனத்தில் இருந்த சீதையிடம் வந்து கூறினார், அனுமன்.

அதைக்கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, "நான் முன்பு ஒரு முறை உயிர் துறக்க நினைத்தபோது, நீதான் வந்து என்னைக் காப்பாற்றி, ராமர் விரைவில் என்னை மீட்பார் என்று கூறினாய். அப்போது உனக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தேன். இப்போது ராமரின் வெற்றிச் செய்தியை கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று கூறினார்.

அதற்கு அனுமன், "தாயே எனக்கு வரம் எதுவும் தேவையில்லை. கடந்த பல மாதங்களாக உங்களை துன்புறுத்திய இந்த அரக்கிகளை தீயிட்டு கொளுத்துவதற்கு மட்டும் எனக்கு அனுமதி தாருங்கள்" என்று வேண்டினார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சீதை "இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தினாலும், அவர்களை தண்டிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் இந்த துன்பங்களுக்கு நான் செய்த முன்வினை பாவமே காரணம். பொன்மான் என்று நினைத்து மாயமானுக்கு ஆசைபட்டேன். அதை கொண்டு வர என் கணவரை அனுப்பினேன். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததாலும், 'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை சென்று பார்த்து வரும்படி கூறினேன். அவர், என் கணவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்திருக்காது என்று மறுத்து கூறியும், அதை ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்தேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களை கண்ணிமை போல காத்து வந்த லட்சுமணனை மனம் நோகச் செய்ததுதான், நான் அனுபவித்த துன்பத்திற்குக் காரணம். எனவே நீ அரக்கிகளை எதுவும் செய்துவிடாதே" என்றார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்கு நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com