வியாதி சாபத்தின் அடையாளம் அல்ல…

வியாதியின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்படுகிறது. தொழுநோயாளிகளைக் கூட ஆண்டவர் இயேசு தொட்டு சுகப்படுத்தினார்.
வியாதி சாபத்தின் அடையாளம் அல்ல…
Published on

மனிதர்கள் வாழ்கின்ற வாழ்க்கைமுறை, வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை, நல்லவர்-கெட்டவர், பாவி-பரிசுத்தர், ஆசீர்வதிக்கப்பட்டவர்-சாபம் நிறைந்தவர் என்று வகைப்படுத்துகின்றோம்.

வியாதியும், பாடுகளும் பாவம் மற்றும் சாபத்தின் விளைவுகளே என்று உறுதியாய் நம்பிக்கொண்டிருந்த யூதர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து, 'வியாதி சாபத்தின் அடையாளம் மட்டுமேயல்ல' என்பதைப் பிறவியிலே பார்வையற்ற ஒருவரை குணமாக்கிய (யோவான் 9:1-41) நிகழ்வின் வாயிலாக மிக அருமையாக விளக்குகிறார்.

ஆண்டவர் தாம் சென்ற வழியில் பிறவியிலே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். அப்போது சீடர்கள் அவரிடம் 'ரபி, இவர் பார்வையற்றவராகப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று கேட்டார்கள்.

அதற்கு ஆண்டவர் இயேசு, 'இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படி பிறந்தார்' என்றார்.

யூதர்கள் எப்போதும் துன்பம் அல்லது பாடுகளை பாவத்தோடு தொடர்புப்படுத்திப் பார்த்தனர். எங்கேயெல்லாம் துன்பம் நிகழ்ந்ததோ அங்கேயெல்லாம் பாவம் மிகுந்திருந்ததென யூதர்கள் நம்பியபடியால் இப்படி கேட்டனர். இப்படி யூதர்கள் முழுமையாக நம்புவதற்கு அன்றைக்கு அவர்களிடம் காணப்பட்ட மூன்று விதமான நம்பிக்கைகள் காரணமாக இருந்தது.

1. பெற்றோர் (அல்லது) மூதாதையரின் பாவம்: 'என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்' (வி.ப.20:5) என்ற திருவசனத்தின் அடிப்படையில் ஒருவரின் வியாதி மற்றும் பெலவீனத்திற்கு மூதாதையரின் பாவம் காரணமாக இருக்கலாமென்று நம்பினர்.

2. பிறப்பிற்கு முந்தைய பாவம்: ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பாவம் செய்யக்கூடுமென்று ரபிமார் நம்பி வந்ததாக தார்க்கும், தால்மூட் ஆகிய ஏடுகள் சான்று பகருகின்றன.

3. படைப்பிற்கு முந்தைய ஆன்மா: இது பிளேட்டோ மற்றும் கிரேக்கர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நம்பிக்கையாகும். உலகம் உருவாவதற்கு முன்னே நல்ல ஆன்மாக்களும், கெட்ட ஆன்மாக்களும் இருந்ததாகவும், இந்த ஆன்மாக்கள் தான் மனித உடலில் நுழைந்து மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் மாற்றுகின்றது என்றும் யூதர்கள் நம்பினர். 'நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகுந்தேன்'(சா.ஞா.8:20).

இப்படிப்பட்ட நம்பிக்கையில் இருந்த யூதர்களைப் பார்த்து ஆண்டவர் இயேசு "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்கிறார்.

வியாதியின் வாயிலாக கடவுளின் கிரியைகள் வெளிப்படுகிறது. வியாதி உள்ளவர்களை, பலவீனர்களை ஆண்டவர் இயேசு ஒருபோதும் பாவிகளாக, சாபம் நிறைந்தவர்களாகக் கருதியதுமில்லை; அவர்களை ஒதுக்கியதுமில்லை. அன்றைய சமூகத்தில் தீட்டு என்று கருதப்பட்டு தொடக்கூடாத நிலையில் இருந்த தொழுநோயாளிகளைக் கூட ஆண்டவர் இயேசு தொட்டு சுகப்படுத்தினார்.

'பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக்கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத்தருகிறாய்?' என்று பெரிய பாவியாய் கருதி, யூதர்கள் புறம்பே தள்ளிவிட்ட இந்த பார்வையற்றவர் பாவியோ, சாபம் நிறைந்தவரோ அல்ல; இவர் ஆசீர்வதிக்கப்பட்டவர், என்கிறார் ஆண்டவர் இயேசு.

கடவுள் தன் கிரியைகளை வெளிப்படுத்தும்படியாகத் தெரிந்துகொள்ளப்பட்ட கடவுளின் பாத்திரம் இவர். கடவுள் தன் கிரியைகளின் வல்லமையை வெளிப்படுத்த தெரிந்தெடுத்த கடவுளின் தாசன் இவர். கடவுளின் தாசனாகிய மோசே 'இப்பணிகளையெல்லாம் செய்யும்படி ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கிறார்' (எண்.16:28) என்கிறார்.

ஆம், கடவுளின் தாசர்களைப் போல், தீர்க்கர்கள், ஆசாரியர்கள், அரசர்கள் போல் கடவுளின் கிரியைகளை வெளிப்படுத்த கடவுளால் அழைப்பு பெற்றவர் இவர் என்று ஆண்டவர் இயேசு மிக உறுதியாகக் கூறுகிறார்.

வியாதியின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்படுகிறது. பார்வை பெற்றவரைப் பார்த்து யூதர்கள் 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து' என்றார்கள். ஆண்டவர் இயேசுவால் விடுதலை பெற்ற அனைவரும் கடவுளை மகிமைப்படுத்தியபடிச் சென்றார்கள்.

ஆண்டவர் இயேசுவின் சிநேகிதனாகிய லாசரு வியாதினிமித்தம் மரணப்படுக்கையில் இருந்த செய்தி அவருக்கு அறிவிக்கப்பட்டபோது, 'இந்நோய் சாவில் போய் முடியாது, கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்' என்றார் (யோவான்.11:4). ஆம், அவர் சொன்னபடியே லாசருவின் மரணத்தின் வாயிலாக கடவுளின் நாமம் மகிமைப்பட யூதர்கள் அநேகர் அவரை நம்பினர்.

பிரியமானவர்களே, நீங்களும் ஒருவேளை கொடிய வியாதியினாலும், கடுமையான துன்பத்தினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். இந்த சமூகம் உங்களை பெரும்பாவியாக, சாபம் நிறைந்தவராகக் கருதலாம். ஆனால் நீங்கள் கடந்து செல்லும் இந்த வலி நிறைந்த பாதையின் வாயிலாகக் கடவுள் உங்களோடு இடைபடுகிறார். கடவுளின் கிரியைகள் வெளிப்படுவதற்கும், அவர் நாமம் மகிமைப்படுவதற்கும் அவர் உங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com