சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறில் 24 மணி நேரமும் நடை திறப்பு

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறில் 24 மணி நேரமும் நடை திறப்பு
Published on

காரைக்கால்:

காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று (புதன்கிழமை) மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு (கடந்த சனிப்பெயர்ச்சி 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.) சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

இந்தநிலையில், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு, தரிசனத்திற்கான ஆன்லைன் மற்றும் கட்டண டிக்கெட், இலவச தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

குறிப்பாக, நளன் குளம் வாயிலிலிருந்து இலவச தரிசனம் வரிசை தொடங்குகிறது. வி.ஐ.பி. தரிசனம், யானை மண்டபம் வழியாகவும், 1,000 ரூபாய் டிக்கெட் கோவில் ராஜகோபுரம் வழியாகவும், 600 டிக்கெட் தெற்கு வீதி வழியாகவும், 300 டிக்கெட் மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர் வாயில் வழியாகவும் செல்கிறது. கோவிலைச்சுற்றி ஆன்லைன் மற்றும் கட்டண தரிசனம் டிக்கெட் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில், புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடும் வருவது போல் ஏற்பாடு செய்யப்படுள்ளது. வழி தவறினாலும், கியூ ஆர் கோடு மூலம் உரிய இடத்திற்கு சென்று சேரலாம்.

வாகன நிறுத்துமிடத்திலிருந்து பக்தர்களை இலவச பஸ் மூலம் கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக 26 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. பஸ் நிறுத்தம் இடத்திலும் 120-க்கு மேற்பட்ட நகரும் கழிவறை வசதிகளும், 212-க்கு மேற்பட்ட நிரந்தர கழிவறை வசதிகள் உள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லும் இடத்தில் தண்ணீர், பிஸ்கட், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரியிலிருந்து 1500 போலீசாரும், உள்ளூர் போலீசார் சுமார் 300 பேரும், இதுதவிர அப்த மித்ரா, தன்னார்வலர்களும் என சுமார் 2000 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், விநாயாக மிஷன் மற்றும் மீனாட்சி மிஷன் தனியார் மருத்துவமனை குழு ஏற்பாடு செய்துள்ளோம்.

அதேபோல், இவர்கள் நளன் குளத்தில் குளிக்க, சிறப்பு ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிபெயர்ச்சிக்கு வருகை தந்து, மிக எளிமையாக தரிசனம் செய்து செல்லலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com