

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நெய்னா முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற 23-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி ஹத்தம் தமாம் சிறப்பு பயான் மற்றும் மவுலீது ஒதி, நெய் சாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 2-ந் தேதி இரவு மதநல்லிணக்க சந்தனக்கூடு ஊர்வலம், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதைதொடர்ந்து 10-ந் தேதி இரவு தலை கிழமை நிகழ்ச்சியும், 18-ந் தேதி மாலை கொடி இறக்கமும் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.