அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தின விழா

இன்று அய்யா வைகுண்டசாமி 192-வது அவதார தின விழா.சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர்.
அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தின விழா
Published on

தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு பகுதியில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. உன்னில் இறைவனைப் பார் என்னும் உயர்ந்த நோக்கத்தோடு இங்கு கண்ணாடியே தரிசனத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. அய்யா வைகுண்டரை பின்பற்றுபவர்கள் நெற்றியில் நீண்ட நாமமும், தலையில் தலைப்பாகையும் கட்டுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும், மாசி 20-ம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவதார தினம் மார்ச் 3-ந் தேதி வருகிறது. அய்யா வழி மக்கள் தெய்வமாக போற்றி வழிபடும் அய்யா வைகுண்டரின் 192- வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூரில் இருந்தும் வெவ்வேறு பேரணிகள் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்து அடைந்தது.

இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தலைமை பதியான சுவாமி தோப்பிற்கு பிரம்மாண்ட பேரணி துவங்கியது. சந்தன குடங்கள், முத்துக் குடைகள் ஏந்தியபடி பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க சென்ற இந்த பேரணியில் சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அய்யா ஹர ஹர ஐயா சிவ சிவ என கோஷமிட்டபடி சென்றனர். பேரணியை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சென்றன.

இதேபோல் அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அவதார பதியில் அதிகாலை தாலாட்டு, பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் நடைபெற்றது. சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு அய்யா வைகுண்டரை அழைத்து வருதல், அய்யா வைகுண்டருக்கு பணிவிடை, அன்னதானம் நடைபெறுகிறது. இதையொட்டி கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

தனிமனிதன் நெடுங்காலம் இருக்க முடியாது ஆனால் மானுடம் நெடுங்காலம் இருக்கும். மானுடத்தின் மதிப்பீடுகளை தனிமனிதன்தான் வகுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அறம்சார்ந்து வாழ வேண்டும், பொய் பேசக்கூடாது. எளிமையாய் வாழு, காட்டுக்குப்போய் கடும் தவம் செய்ய வேண்டாம், வீட்டுக்குள் இருந்து உன் சொந்த பந்தங்களுடன் முறிவு ஏற்படாமல் புத்திரோடு பேசி இருந்தால் அதுதான் ஆன்மீகம் என்கிறது அய்யாவழி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com