சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கடந்த 2-ந்தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.கொடிமரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
Published on

சேலம்:

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்து வந்தன.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. 18-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.

தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக அம்மன் கருவறை மண்டபம் முன்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

 பின்னர் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து எண்வகை மருந்து (அஷ்டபந்தனம்) சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜையும், அதன்பிறகு 4-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

காலை 7.40 மணியில் இருந்து 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்கு மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com