ராவணாசூர, யாளி வாகனங்களில் வரசித்தி விநாயகர் வீதிஉலா

15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
ராவணாசூர, யாளி வாகனங்களில் வரசித்தி விநாயகர் வீதிஉலா
Published on

சித்தூர்:

சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும். மற்ற கோவில்களில் 9 நாட்கள், 11 நாட்கள், 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.

பிரம்மோற்சவ விழாவின் 13-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை ராவணாசூர வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் வரசித்தி விநாயகர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மாலை யாளி வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக அகரம்பள்ளி, சின்னகாம்பள்ளி உள்பட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்து யாளி வாகன வீதிஉலாவை தொடங்கி வைத்தனர். வாகன வீதிஉலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com