பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வினியோகம்

வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.
அனுமதிச்சீட்டு வழங்கியபோது எடுத்த படம்.
அனுமதிச்சீட்டு வழங்கியபோது எடுத்த படம்.
Published on

பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால், இந்த விழா பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசிக்க பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கும்பாபிஷேகத்தில் 6 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். அதில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. அவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது. 20-ந்தேதி வரை 3 நாட்களில் 57 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். பின்னர் விண்ணப்பித்தவர்களில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குலுக்கல் முறையில் கடந்த 21-ந்தேதி தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வான 2 ஆயிரம் பேருக்கு செல்போன் எண், இமெயிலில் இ-சான்றிதழ் அனுப்பப்பட்டது. மேலும் அவர்கள் 23, 24-ந்தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள கோவில் வேலவன் விடுதியில் அடையாள சான்றுடன் வந்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நேற்று காலை 10 மணி முதல் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தேர்வான பக்தர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள தேர்வானவர்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் இருந்தனர். இதனால் காலையிலேயே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அனுமதிச்சீட்டை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

இந்த அனுமதிச்சீட்டில் வரிசை எண், நேரம், நாள், எங்கு அமர வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் கோவிலின் 'ஹோலோகிராம்' முத்திரை இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com